தொடங்குகிறதா தர்மயுத்தம் 2.0? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் செல்கிறாரா ஓ.பி.எஸ்?

அதிமுகவில் நிலவும் சர்வாதிகாரப்போக்கு மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிராக தர்மம் மறுபடி வெல்லும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்கான விதிகளை நீக்கி ஒற்றைத் தலைமைக்கு ஏற்ற நிலையில் விதிகளை மாற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தருமம் வெல்லும்

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்த தருணத்தில், “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவருதென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான கேசவன் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.”இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ஒற்றைத் தலைமை

நாளை பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சர்வாதிகாரப்போக்கு மற்றும் அராஜகப் போக்கு நடைபெற்று வருவதாக வெளிப்படையாக தற்போது பதிவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக 12 மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் தற்போது 7 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு இருப்பது ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *