ஆப்பிரிக்க நாடுடன் கைகோக்கும் நித்தி! அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறிய கைலாசா!

மத்திய ஆப்பிரிக்க நாடான கானாவில் உள்ள எப்புடுவுடன் புதிய உறவுக்கான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கைலாசா அறிவித்துள்ளது.

சர்ச்சைகளால் மிகவும் பிரபலமான சாமியாராக வலம் வருபவர் நித்தியானந்தா. இவர் தற்போது தனக்கென்று கைலாசா என்று தனித் தேசத்தையே உருவாக்கியுள்ளார். அவ்வப்போது, கைலாசாவில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நித்தியானந்தா வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது மத்திய ஆப்பிரிக்க நாடான கானாவில் உள்ள எப்புடு என்ற மாவட்டத்துடன் கைலாசா இரு நாட்டு உறவை மேம்படுத்துவதற்கான தொடக்க நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, கைலாசா தன்னுடைய அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,  பழமையான கலாச்சாரம், இந்துக்களுக்கான முதல்நாடான கைலாசா புரிதல், மத சுதந்திரம் மற்றும் மற்ற உரிமைகள், இளைஞர்களுக்கான தலைமை, கல்வி, கல்வி உரிமை பரிமாற்றம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட உறவுகளின் கீழ் கானாவில் உள்ள எப்புடு மாவட்டத்துடன் தொடக்க உறவில் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. கைலாசா இதுவரை எங்கு அமைந்துள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக தெரியாத நிலையில், தற்போது எப்புடுவுடன் கலாச்சார உறவிற்கான புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளதால் விரைவில் கைலாசா எங்குள்ளது என்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏராளமான பழங்குடிகள் வசித்து வருகின்றனர். கைலாசாவில் இருந்த அவ்வப்போது இதுபோன்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், இதுவரை கைலாசா எங்கு அமைந்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியானது இல்லை. ஆனால், கைலாசாவிற்கு என்று பாஸ்போர்ட், கைலாசாவிற்கு என்று நாணயம் என்று பலவற்றை அடுத்தடுத்து வெளியிட்டு நித்யானந்தா அவரது சீடர்களை குஷிப்படுத்தினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நித்யானந்தா மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் சமாதி நிலை அடைந்துவிட்டதாகவும் அடுத்தடுத்து தகவல் வெளியாகி வந்தது. நித்தியானந்தாவும் தனக்காக பக்தர்கள் வேண்டிக்கொள்ளுங்கள் என்று கூறினார். பின்னர், தான் திரும்ப வந்துட்டேன் என்று நித்தியானந்தா தனது கைப்பட எழுதிய கடிதத்தின் புகைப்படம் வெளியானது. இந்த சூழலில், கானா நாட்டில் உள்ள எப்புடு மாவட்ட நிர்வாகத்துடன் கலாச்சார உறவை மேம்படுத்த இணைந்திருப்பதாக கைலாசாவில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *